புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

4 ஜூன், 2011

சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்பார்கள். ஏனெனில், ஏதோ கொஞ்ச, நஞ்சம் தெரிந்த சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதாவதொரு சிக்கலில் மாட்டி விடுவார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே நேர்ந்த இந்நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று நாட்டையும், மக்களையும் பாடாய்படுத்திக் கொண்டு உள்ளது.
இதற்கான அடிப்படைக் காரணங்கள் தான் என்னென்ன?


பொதுவாக அனைத்து தரப்பு குடிமக்களுக்கும் அடிப்படைக் கல்வியில் கிடைத்திருக்க வேண்டிய சட்ட அறிவு அப்படிக் கிடைக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சான்றிதழ் அறிவாக கிடைத்திருப்பதுதான். இப்படி பொதுச்சிந்தனை இல்லாமல் குறுகிய சிந்தனையோடு அடித்தளம் இட்டுத்தந்த அரசாங்கத்தைத்தான் நாம் குற்றம் செல்ல முடியும். அப்படி சொல்வதால் பயனொன்றும் இல்லை.
மாறாக, நாமும் நமது நல்வாழ்வுக்கென்று இயற்றப்படும் சட்டத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏன், எதற்காக, எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமே!
நாட்டில் சட்டம் இயற்றப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன?
நாட்டில் நடக்கும் அத்துனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்கான எழுத்து மூலமான வரையறைதான் சட்டம். அப்படியானால் சட்டம் படித்தவர்களால் ஏன் இத்தனை துன்பங்கள்? என நீங்கள் நினைக்கலாம். இதற்கு ஒரே பதில் சட்டப்படிப்பு படித்தவர்களுக்குச் சட்டத்தின் அடிப்படை நோக்கமும், தத்துவமும் முழுமையாக தெரியாது என்பதுதான்.

Dim lights
ஆம்!
"நன்றாக படிப்பவர்கள் எல்லாம் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில் நுட்பம் போன்று உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் உழைக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். அப்படியில்லாதவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் துறையும், படிப்பும் வக்கீல் தொழிலே. வக்கீல் தொழிலின் மூலதனம் பொய்யும், இடைத்தரகுமே என்பதைச் சிறிது சிந்தித்தாலே நீங்கள் உணர்ந்து விடலாம். இவர்கள்தான் பின்னர் நீதிபதியாகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை".
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட படிப்பினருக்கு எதிராக வேண்டா வெறுப்போடு சொல்லும் கருத்தாக நினைக்க வேண்டாம். பத்து வருட சட்ட ஆராய்ச்சியில் பகுத்தறிவோடும், பட்ட அறிவோடும் செய்த ஆய்வின் தீர்க்கமான முடிவுகள்.
இவைகளை, மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிடப்பட்டுள்ள "நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!" என்ற பொதுதலைப்பிலான ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களிலும் பதிவு செய்துள்ளேன்.(இந்நூல்களைச் சொந்தமாக வாங்க விரும்புவோர் திரு.பாண்டியக்குமார் - 9789176830 அல்லது திரு.அய்யப்பன் - 9150109189 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.)
எனது ஆய்வுகளின் சாராம்சங்களை ரத்தின சுருக்கமாக உங்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறேன். இச்சாராம்சங்கள் யாவும் பெரும்பாலும் நாட்டில் நடந்த, நடந்து வரும் சம்பவங்கள்தான் என்பதால் அதிகபட்சமாக உங்களுக்குத் தெரிந்ததாகத்தான் இருக்கும். அப்படியில்லை என்றாலும் கூட, படித்ததுமே உண்மை நிலை என்ன என்று புரிந்து விடும்.

Dim lights
நாட்டில் பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகள் இருந்தாலும் கூட, அவ்வப்போது சட்டத்துக்குப் புறம்பான சம்பவங்கள் நடப்பது சட்டக்கல்லூரிகளில்தான். இதன் உச்சக்கட்ட கொடூரம்தான் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் 12-11-2008 அன்று அரங்கேறிய கொலை வெறித்தாக்குதல். இதனைத் தூண்டி விட்டதும் வக்கீல்களே. அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையில் சட்ட பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, படித்தவர்களுக்கு சட்டம் என்றால் என்ன என்ற அடிப்படையான விசயமே தெரிவதில்லை. தெரிந்தால் சட்டப்படி செய்யக்கூடாத சட்ட விரோதமான செயல்களான,
*    பாடம் நடத்த வரும் பேராசிரியரைக் கிண்டல் செய்வது,
*    பேராசிரியையின் சேலையைப்பிடித்து இழுப்பது,
*    சாதிச் சண்டைகளில் ஈடுபடுவது,
*    தங்களின் பிரச்சினைகளுக்கு வழக்கு மூலம் தீர்வு காண முயலாமல்  சாலை மறியல் செய்வது, போராட்டங்கள் நடத்துவது,
*    போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களை அடிப்பது, உதைப்பது, உடைமைகளை தூக்கி போட்டு உடைப்பது, தேவைப்பட்டால் கொலை கூட செய்வது,
*    கட்சிக்காரர்களின் நலனையும், நீதியையும் கருத்தில் கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருடம் 365 நாளில் 300 நாட்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது,
*    தனக்கு ஆதரவாக செயல்படாத நீதிபதிகளை திட்டுவது, ஓய்வறைக்குள் அத்து மீறி புகுந்து நீதிபதியின் முகத்தைப் பந்தாடுவது,
*    நீதிமன்றத்துக்கு உள்ளே நீதிபதிகளின் முன்னிலையில் அழுகிய முட்டைகளைக் கொண்டு அடுத்தவரைத் தாக்குவது,
போன்ற மிகவும் கீழ்த்தரமான செயல்களைச் செய்வார்களா?

Dim lights
மொத்தத்தில் சட்டம் படித்தவர்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்லை. மாறாக, சட்டம் நமக்கே சொந்தம் என்று கையில் எடுத்துக் கொண்டதன் விளைவுதான் இந்திய நீதித்துறைக்கு நீங்காத களங்கத்தை ஏற்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற மற்றும் சட்டக்கல்லூரி அடிதடிகள், தடியடிகளாக மாறிய அசம்பாவிதம்.
இவைகளை எல்லாம் தடுத்து நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள், இப்படி சட்டத்தைக் கையிலெடுப்பவர்கள் சட்டம் படித்தவர்களாக இருந்தால் மட்டும் கண்டு கொள்வதில்லை. காரணம், அது அவர்கள் சாதி. அப்படியில்லாத நபர்களை அந்த நடவடிக்கை, இந்த நடவடிக்கை என அச்சுறுத்தி அவர்களை ஆட்டம் காண வைத்து விடுகிறார்கள்.
நீதிபதிகளின் இந்தப் பூச்சாண்டித்தனமான வேலைகள் எல்லாம் சட்டம் என்றால் என்ன என்று உண்மையாகவே அறிந்தவர்களிடமும், துணிந்தவர்களுக்குத் துக்கமில்லை என்கிற நபர்களிடமும் எடுபடுவதில்லை.
ஆம்! நீதிமன்றங்களின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளால், உத்தரவுகளால் என் மீது கூட மூன்று பிடியாணைகள் (வாரண்ட்கள்) இருப்பது அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிய வேண்டும் என்ற நோக்கில் வாரண்ட் பாலா என்று எனது பெயரையே மாற்றி வைத்துக்கொண்டுள்ளேன்.
ஒரு கைதிக்கு நீதிபதி நினைத்தால் தண்டனை கொடுக்க முடியும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் நீதிபதி முன்னால் அக்கைதி எவ்வளவு பய பக்தியோடு இருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஆனால், அப்படிப்பட்ட ரமேஷ் என்ற விசாரணைக் கைதி கூட புதுச்சேரியில் முதல் வகுப்பு குற்றவியல் நடுவராக இருந்த வைத்திய நாதன் என்ற நடுவர் மீது 08-01-2007 அன்றைய விசாரணையில், விசாரணைக் கூண்டில் இருந்தபடியே செருப்பைக் கழற்றி வீசி எறிந்தது துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பதற்கான உதாரணம்.
இவைகள் எல்லாம் நாம் பல காலம் கடந்து பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கிற உண்மைகள். ஆனால், இவைகளை எல்லாம் மிகச்சரியாக நூறு வருடங்களுக்கு முன்பாகவே ஒருவர் எழுத்து மூலமாகவே பதிவுச் செய்து விட்டு சென்றுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விசயமே.
பலருக்கும் தெரியாத விசயம் என்றால், அந்நபர் பலரும் அறியாத நபராகவே இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு. அவரைப்பற்றி அறியாதவர் நம் நாட்டில் மட்டுமல்ல உலகத்தில் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என நம்பலாம்.
அவர்தான், நம் நாட்டின் தேசத்தந்தை எனவும், அகல உலகமும் அஹிம்சைவாதியாக ஏற்றுக் கொள்ளும் மகாத்மா காந்தியடிகள்.
மகாத்மா காந்தி தனது 40 -வது வயதான 1909 ஆம் ஆண்டில் எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11 -வது கட்டுரையில் வக்கீல்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் விரிவாக தெரிவிக்கும் கருத்தை, விரிவஞ்சி மிக முக்கியமான கருத்துக்கள் மாறாமல் கீழ்கண்டவாறு தொகுக்கிறேன்.
>>    வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டைப் போதிக்கிறது.
>>    இத்தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை.
>>    பணக்காரர் ஆவதற்கான வழிகளில் வக்கீல் தொழிலும் ஒன்று.
>>    மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
>>    இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
>>    வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள்.
>>    இவர்கள் தெய்வப் பிறவியோ ஏன்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளுகின்றனர்.
>>    இவர்களால் குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன.
>>    கோர்ட்டுகளுக்கு போகத் தலைப்பட்ட பிறகே அவர்கள் மனிதத்தன்மையில் குறைந்தவர்களாகவும், கோழைகளாகவும் மாறினர்.
>>    மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு.
>>    தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்த வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது.
>>    எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிட போவதில்லை என்பது நிச்சயம்.
>>    முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர், அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைக் குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும்                 ஏற்படும்.
>>    வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் மிகப் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கு பலப்படுத்தி இருப்பதாகும். விபச்சாரத்தைப் போல இத்தொழிலும் இழிவானது என்று கருதி விட்டால், ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும்.
>>    வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒவ்வொருக்கொருவர் பக்க பலமாக இருப்பவர்கள்.
>>   இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்தக் கூற்றும் பாசாங்காகும்.
இந்நூலைக் காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020, மலிவு விலை வெளியீடாக ரூ 10 க்குத் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
இதே போல பகுத்தறிவு தந்தை பெரியார், "இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் நேர் விரோதமானதாகும்.
அதுமாத்திரமில்லாமல் தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுய மரியாதையும் கெட்டு போனதற்கு வக்கீல்களே காரண கர்த்தாக்கள் என்று சொல்வது சிறிதும் மிகைப்பட கூறுவதாகாது"’ என தனது 10-08-1931 தேதிய குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளதோடு, தனது அகராதியில் வக்கீல்கள் = ஆண் விபச்சாரிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ரூபாய் மதிப்புள்ள இந்த அகராதி பெரியார் புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
இப்படி இரண்டு விதமான சிந்தனையுடைய மகாத்மாக்களும் (பெரியோர்களும்) சொன்ன கருத்துக்கள், அவரவர்களது கொள்கையில் வாழும், கொள்கையைப் பரப்பும் தொண்டர்களுக்குக் கூட தெரியவில்லை என்கிற நிலை இருக்கும் போது, உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். எனக்கும், சட்ட ஆராய்ச்சியின் எட்டாவது வருடத்துக்கு மேல்தான் தெரிய வந்தது.
இம்மகான்களே இப்படி சொல்லி விட்ட பிறகு, நான் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். அவர்கள் சொல்லாத நமக்கு நாமே வாதாடுவது, அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இன்றைய எதார்த்தங்களைப் பற்றியே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
சரி, நம் விசயத்துக்கு வருவோம்.
நமது சட்ட விழிப்பறிவுணர்வுக்கு என்ன செய்வது, யாரை அனுகுவது என்ற கலக்கம் வேண்டவே வேண்டாம். இதற்காகத்தான் எனது சட்ட ஆராய்ச்சியும், ஐந்து நூல்களும் மற்றும் இந்நேரம்.காம் போன்ற தளங்களும், உங்களுக்குக் களம் அமைத்து தருகின்றன.
எந்த ஒரு பிரச்சினைக்குமே தீர்வு உண்டு. அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கடமை நம்முடையதே.
முயலும் வெற்றி பெறும்.
ஆமையும் வெற்றி பெறும்.
முயலாமை வெற்றி பெறாது.
பொதுவாக நமது முயற்சி என்பது உரிமையைக் கோருவதற்காக மட்டுமே இருக்கிறது. இது தவறு. உரிமையின் பிறப்பிடம் கடமையே! ஒருவர் தனது கடமையைச் சரியாகச் செய்தால்தானே அவர் மூலமாக பலருக்கும் கிடைக்க வேண்டிய பலன் (உரிமை) கிடைக்கும். எவருமே கடமையைச் செய்யாமல், உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தால், உரிமை எப்படி கிடைக்கும். நாம் அதை (உரிமையை) விரட்ட விரட்ட, அது நமது கையில் அகப்படாமல் ஓடத்தானே செய்யும்.
உண்மையாக, நம் வீட்டில் அம்மா தனது கடமையாக சமைக்கிறார். அது நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்தானே உணவாக கிடைக்கிறது..? நமக்கு தெரியாமல் அது அடுத்த வீட்டிற்குத் தானாகவே ஓடி விடுவதில்லையே..!
ஒருவர் கடமையை ஆற்றினாலே பலருக்குமான உரிமை தானாக கிடைக்கும் போது இந்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொரும் தத்தம் கடமையை ஆற்றி விட்டால் பலனுக்கென்ன பஞ்சம்.
நாம் நமது கடமையை ஆற்றும் போது கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டுமானால், கட்டுப்பாடு கட்டாயத் தேவையாகும். சுய கட்டுப்பாட்டிற்குக் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
சட்ட விழிப்புணர்வா? இதெல்லாம் சாத்தியமா? என்ற சிந்தனையே வேண்டாம்.
ஏனெனில், "நாமெல்லாம் சட்டப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று நான் சொன்னால், உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை.
ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் வெளியில் இருந்து கொண்டு, இந்நேரம்.காமில் இதனைப் படித்துக் கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் எங்கே இருப்போம்? சிறையில்தானே! சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழும் நமக்கு சட்டத்தைத் தெரிந்து கொள்வதிலும் மற்றும் தேவை ஏற்படும் போது நம் பிரச்சினைக்காக நாமே நீதிமன்றத்தில் வாதாடுவதிலும் என்ன சிரமம் இருக்க முடியும்? யாதொரு சிரமமும் இருக்க முடியாது.
ஆம்! நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்.
பொதுவாக, வக்கீலுக்குப் படித்தவர்கள் மட்டும்தான் நீதிமன்றத்தில் வாதாட முடியும் என்று மெத்தப்படித்த மேதாவிகள் கூட, நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இது உண்மையல்ல. மாறாக, தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, வக்கீல்கள்தான் பல்வேறு வழக்குகளில் வாதாட தடை இருக்கிறது.
நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போலத்தான்.
இப்போது நான், யார் என்றே தெரியாத உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் அல்லவா? நீங்களும் இதுபோல, அப்பா அம்மாவிடம் பேசுகிறீர்கள், முன்பின் தெரியாதவரிடம் மணி (நேரம்) என்ன என கேட்கிறீர்கள், தேவைப்படும் போது கலெக்டரைச் சந்திக்கிறீர்கள். இவ்வளவு ஏன், இந்நேரம்.காமில் இதை படிக்கிறீர்களே இதற்கெல்லாம் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஐந்தறிவு மிருகத்தில் இருந்து, ஆறறிவு மனிதன் வேறுபடுவதே, சிந்தனைத்திறனில்தான் என்பது நாம் அறிந்ததே. இந்தச் சிந்தனைத்திறன் எப்போது உருவெடுக்கிறது என்றால், மற்றவர்களோடு பேசும் போது, பேசுவதைக் கேட்கும் போது, இப்படி படிக்கும் போதுதானே..?
ஆறறிவு மனிதனின் முதல் உரிமையே, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, படிப்புரிமை, தகவல் கோரும் உரிமைதான். இதற்காக நாம் யாரிடமும் அனுமதியைப் கேட்டுப் பெறுகிறோமா? இல்லைதானே!
அதேபோல, நாமே நமக்காக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மட்டுமல்ல... உலக நீதிமன்றத்தில் கூட வாதாட முடியும். இதில், தன்னம்பிக்கை இல்லாமல் நீங்களே உங்களுக்கு தடைப்போட்டுக் கொண்டாலே ஒழிய, உங்களை யாரும், எவ்விதத்திலும் தடுக்க முடியாது.
இதற்கு படிப்போ, எழுத்தறிவோ இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை என்கிறது சட்டம். உங்களின் பிரச்சினையை நீங்கள் சாதாரணமாக வாய்மொழியாக (குற்றவியலில்), எழுத்து மூலமாக (உரிமையியலில்) எடுத்துச் சொன்னால் போதும். நீதிபதிகள் அதை சட்ட முறைப்படி தீர்த்து வைக்க வேண்டும் என அறிவுருத்துகிறது.
ஆனால், நான் ஏற்கனவே சொன்னது போல, அவர்களுக்குதான் சட்டம் தெரிவதில்லையே..! அதோடு சட்டம் இப்படி சொல்கிறது என்பது நமக்கும் தெரிவதில்லையே..! பின் எப்படி பிரச்சினை தீரும்? பெரிதாகத்தானே செய்யும். அதனால் சட்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
சரி! ஏன் நமக்காக நாமே வாதாட வேண்டும் என்பதற்கு மேலும் சில சிறப்பான அடிப்படை காரணங்கள் இருக்க வேண்டும் அல்லவா?
உங்களின் பிரச்சினையை உங்களைத் தவிர வேறு யாரும் மிகச் சரியாக சொல்ல முடியாது. இதில் எதற்கு வேலைக்காரராக / இடைத்தரகராக வக்கீல்?
இந்த வேலைக்காரருக்கு உங்கள் பிரச்சினையின் சாரம் என்னவென்று தெரியாமல், சிறு தவறு நடந்து விட்டால் கூட, அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படுவது நீங்கள்தான்.
நீங்களே வாதாடுவது கொள்கை ரீதியானது. வக்கீல் வாதாடுவது தொழில் ரீதியானது. அதாவது நீங்களே பேசுவது புரிந்து பேசுவது. வக்கீல் பேசுவது பரிந்து பேசுவது.
அதாவது, தவறு செய்தவர்களுக்கு யாராவது பரிந்து பேசினால், என்ன அவனுக்கு வக்காலத்து வாங்குறியா என கேட்கிறோம் அல்லவா? வக்காலத்து என்பதற்கு, தமிழில் "பரிந்து பேசுவது" என்பதாகும்.
இதற்காகத்தான், ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் வக்காலத்து தாக்கல் செய்கிறார்கள். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டால் மட்டுமேதான் வக்கீல் வாதாட முடியும். ஆனால், உங்களுக்காக, நீங்களே வாதாடும் போது வக்காலத்து போன்றவை கிடையாது.
நீங்களே வாதாடும் போது, நீதிபதியே தவறு செய்தாலும் தட்டிக்கேட்பீர்கள். ஆனால், வக்கீல் அப்படி தட்டிக் கேட்கமாட்டார். அப்படி கேட்டால், அடுத்தவருக்கான வழக்கில் தாக்கல் செய்யும் வக்காலத்தை ஏற்க நீதிபதி மறுத்து விடுவார்.
இந்த அடிப்படை உண்மையை உங்களுக்கு வெளிப்படுத்தாமல், நாம் மேல்முறையீட்டில் (அப்பீலில்) பார்த்துக் கொள்ளலாம் என்பார். ஏனெனில், அப்பீலுக்கும் கூடுதலாக கட்டணம் கிடைக்குமே..!
உங்களை விட பணபலத்தில் வல்லமை உள்ள எதிர்தரப்பினர், உங்களை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. ஆனால், உங்களின் வக்கீலை எளிதாக வாங்கி விட முடியும்.
நீங்களே வாதாடும் போது, உங்களது சொந்த செலவைத் தவிர, வக்கீல் பீஸ் அது இதுன்னு எந்தச் செலவுமே கிடையாது. வக்கீல் இருந்தால் நீங்களும் பல்வேறு விதங்களில் செலவு செய்து நடையாய் நடக்க வேண்டியிருக்கும். அதோடு வக்கீலுக்கு அவ்வப்போது ஆயிரக்கணக்கில் கூலி கொடுக்க வேண்டியிருக்கும். உயர்தர ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம், ஒரளவுக்கேனும் நியாயம் உள்ள உங்களுக்குத்தான்.
அறவே நியாயம் இல்லாதவர்கள், தெரிந்தோ தெரியாமலோ குற்றம் புரிந்து வசமாக சிக்கி கொண்டவர்கள், ரவுடிகள் என்கிற மற்ற வகையினர்கள் எல்லாம், தேவைப்பட்டால் தனது வக்கீலோடு, எதிர்த்தரப்பு வக்கீல் மற்றும் நீதிபதிக்கும் சேர்த்து அவ்வப்போது மதுவுக்கும், மாதுவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
உங்களின் சாதக, பாதக அம்சங்கள் மற்றும் சான்றுகள் எல்லாம், வழக்கை நடத்தி முடிப்பதற்காக உங்களின் வேலைக்கார வக்கீல் கைக்கு போய்விட்டபின், நீங்கள் அவர்களுக்கு அடிமையாக கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். அப்படி நடக்காத போது உங்களிடம் துணிந்து தவறு செய்வார். ஏனெனில், அவருக்கு இருக்கும் சட்ட அறிவு கூட, உங்களுக்கு இருக்கவில்லை... நீங்கள் அவரை, சட்டப்படி என்ன செய்து விட முடியும்?
உங்களின் வேலைக்கார வக்கீல் தவறு செய்தால், ஒரு பிரச்சினையில் இருந்து மீளப் போய் மேலும் ஒரு சில பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும் என்பதோடு ஜாதிப்பற்றின்படி, ஏமாற்றிய வக்கீல் மீது வேறு வக்கீல் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்படி எவராவது முன் வந்தால், அவரும் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறார் என்றே அர்த்தம்.
இப்படி நீங்கள் மட்டும்தான் வக்கீல்களிடமும், நீதிபதிகளிடமும் வசமாக மாட்டிக் கொண்டு அல்லல்படுகிறீர்கள் என நினைக்காதீர்கள். இவர்களிடம் காவலர்கள் (போலீஸ்) படும்பாடு கொஞ்சஞ்சல்ல. எப்படி?
பொதுவாக காவலர்கள் தங்களின் ரவுடித்தனமான, அதிகார துஷ்பிரயோக வீரங்களை உங்களிடம்தான் (பொதுமக்களிடம்தான்) அதிகம் காட்டுவார்கள். தேவைப்பட்டால், ஒரு சில ஏமாளி ரவுடிகளிடமும் கூட காட்டுவார்கள். வக்கீல்களிடமும், நீதிபதிகளிடமும் காட்ட முடிவதில்லை. காரணம், அவர்களை விட, காவலர்களின் அறிவு சட்ட விழிப்பறிவுணர்வு (ª)வறுமைதான்.
மேலும், காவலர்களுக்கு வக்கீல்களால் பிரச்சினைகள் வரும் போது, நீதிமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய கடமை அரசு வக்கீல்களுடையது. பல்வேறு சமயங்களில் கடமையை மறந்து விட்டு நாங்கள் எல்லாம் வக்கீல்கள் சாதி என்பதைக் காட்டி காவல்துறை அதிகாரிகளின் காலை வாரி விடுகிறார்கள்.
இதற்கு நியாயம், நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும் சாதிப்பற்றில் துணை நிற்கிறார்கள்.
நீங்க சொல்றது எல்லாம் சரிங்க!
ஆனால், எங்க அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, நண்பர் அல்லது வேறு நெருங்கிய உறவுகளே வக்கீலாக இருக்கும் போது கூட, நான்தான் வாதாட வேண்டுமா? என்ற கேள்வி எழும். சந்தேகமே வேண்டாம்.
வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! அது நானாகவே, இருந்தாலும் அப்படித்தான். அதனால்தான் நான் வக்கீல் தொழிலுக்குச் செல்லாமல், உங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
இறுதியாக ரத்தின சுருக்கமாக திருட்டு, களவு, கொள்ளை, ஏமாற்றுதல், வஞ்சித்தல் போன்று நம்மிடம் எத்தனை தீய பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அவைகள் அனைத்திலும் இருந்து விடுதலை பெற நினைத்தால் பொய் என்ற ஒன்றை விட்டொழித்தாலே போதும். அனைத்தும் நம்மை விட்டு ஒழிந்து விடும்.
ஆம்! நீங்கள் எந்த விதமான தீய பழக்க வழக்கம் உடையவராக இருந்தாலும், அவை அனைத்தையும் பொய் என்ற ஒரு மூலதனத்தை வைத்துதானே மறைக்க பார்க்கிறீர்கள். அப்படிப்பட்ட பொய்யே உங்களைக் காப்பாற்றும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கூட, பொய்யைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள உண்மை உங்களை எப்படி காப்பாற்றாமல் போகும்?
ஒன்றுக்குமே உதவாத பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு தங்களின் வயிற்றைக் கழுவும் வக்கீல்களால், உங்களது பொய்யை வைத்து வயிற்றை வளர்க்கலாமே (தொப்பையை) தவிர, உங்களது வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தி தர இயலாது.
சிறுத்தைப்புலி கவரி மானை ஆவேசமாக துரத்துகிறது என்றால், அது அதிகபட்ச ஒருநாள் உணவுக்காக... ஆனால், அதனிடம் இருந்து மான் தலைதெறிக்க தப்பித்து ஓடுகிறது என்றால், அது உயிர் தப்பி, தன் வாழ்நாள் ஆயுளை நீட்டித்துக் கொள்வதற்காக...
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?


புதன், 01 ஜூன் 2011 20:53 இந்நேரம்.காம் Articles  
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா 

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010