மியான்மரில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாபை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு தீர்மானம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 19.06.2012 அன்று மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. வக்ஃபு வாரியத்தை முறைப்படுத்துதல்:
முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக முன்னோர்களால வக்ஃபு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் இன்று முறைகேடுகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் நாசமாகி வருகின்றது. இவற்றை முறைப்படுத்த வேண்டிய வக்ஃபு வாரியம் தற்போது வாரியத் தலைவர் அற்ற நிலையில் செயலிழந்து நிற்கின்றது. எனவே தமிழக அரசு வஃபுவாரியத்தை முறைப்படுத்தும் விதமாக வக்ஃபு வாரிய தலைவரை உடனே நியமனம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து முறைப்படுத்த வேண்டும். வக்ஃபு வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பி வக்ஃபு வாரியம் வேகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.
2. ஆயுள் சிறைகைதிகளுக்கு பொது மன்னிப்பு:
ஆயுள் சிறைக்கைதிகள் குறிப்பிட்ட காலம் தண்டனை அனுபவித்தவுடன் அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வதை பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஆயுள் சிறைகைதிகள் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே எதிர் வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் உள்ள 7 வருடம் தண்டனை அனுபவித்த முஸ்லிம் ஆயுள் கைதிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைகைதிகளையும் தமிழக அரசு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்து, அவர்களுடைய குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.
3. மியான்மரில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:
மியான்மர் நாட்டில் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு இனவாத குழுக்களால் கலவரம் உண்டாக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 100க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டும் உள்ளனர். இக்கொடூர செயலை திட்டமிட்டு நிகழ்த்திய மியான்மர் பவுத்த இனவாதக் குழுக்களையும், முஸ்லிம்களை பாதுகாக்க தவறிய மியான்மர் அரசையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே இந்திய அரசு மியான்மரில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
4. இடஒதுக்கீடு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் முஸ்லிம்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.6% வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு 3.5% மட்டுமே கடந்த தி.மு.க அரசு இடஒதுக்கீடு வழங்கியது. வழங்கப்பட்ட இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை, அதை 7% உயர்த்த வேண்டும் என ஒட்டு மொத்த முஸ்லிம்களும் குரலெழுப்பி வரும் வேலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடும் முறையான அடிப்படையில் செயல்படுத்தப்படவில்லை என்ற செய்தி முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1349 பேர் அரசு மருத்துவ பணிக்கு தேர்வு செய்யபட்டதில் ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மிகுந்த வேதனையை அடையச் செய்துள்ளது. எனவே தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வுகளில் எத்தனை முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்பதை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முழுமையான நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை என்பதை கண்காணிக்க தனி ஒரு குழுவை நியமிக்க வேண்டும் எனவும், வரும் காலத்தில் இக்குழு இடஒதுக்கீட்டை 7%மாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றது.
இவ்வாறு பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக