சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள அயோத்தியா குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). மாநகராட்சியில் ஒப்பந்தம் செய்துள்ள ராம்கி தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி மலர் (25). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஏழரை மாத கர்ப்பிணியாக இருந்த மலருக்கு கடந்த 15ம் தேதி பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்,சேய் நல மருத்துவமனையில் (கோஷா ஆஸ்பத்திரி) பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மலருக்கு பல கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள், சிசேரியன் (அறுவை சிகிச்சை) செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி, மலருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் இங்குபேட்டரில் குழந்தை வைக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், குழந்தையின் தந்தை ரஞ்சித்குமார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை நன்றாகத்தானே இருந்தது, எப்படி குழந்தை இறந்தது என்று டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாளை காலை வந்து குழந்தையை வாங்கி செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, குழந்தையை எடுத்து செல்வதற்காக தந்தை ராஞ்சித்குமார் உட்பட உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்கு நேற்று காலை 8.30 மணிக்கு வந்தனர். குழந்தையை ஒரு துணியால் சுற்றி, உறவினர்களி டம் கொடுக்கப்பட்டது. குழந்தையின் முகத்தை பார்த்ததும், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையின் முகத்தில் இருந்த ஒரு பக்கம் கன்னம் முழுவதும் தோல் உரிந்து, ரத்தம் வடிந்திருந்தது. மேலும், குழந்தையின் கன்னம் மற்றும் மூக்கின் ஒரு பகுதியில் ஏதோ ஒன்று கடித்து குதறியது போல் முகம் அகோரமாக காட்சி அளித்தது. இதுகுறித்து டாக்டர்களிடம் உறவினர்கள் கேட்டனர். அதற்கு, டாக்டர்கள் சரியான விளக்கம் தரவில்லை என கூறப்படுகிறது. அதனால், குழந்தையின் இறப்பிற்கான உண்மையான காரணத்தையும், குழந்தையின் முகத்தில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி சென்னையில் SDPI சார்பாக மாபெரும் மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது .ஆர்பாட்டத்தில் முறையாக மருத்துவமனையை பாதுகாக்க கோரியும்,குழந்தையை பாதுகாக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சேப்பாக்கம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தடையை மீறி மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட SDPI தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக