புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தென்காசியில் நடைபெற்ற "இஸ்லாத்தை அறிவோம்" பயிற்சி முகாம்

1 ஜூன், 2011


 இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் எங்கின்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தென்காசியில் மே 29 அன்று விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.

நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


அடுத்து பேசிய ஹாஜா இமாம் சமூகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் பேசினார். இந்தியாவில் தலித்துகளும் பெண்கள் சமூகமும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிபரங்களுடன் சுட்டி காட்டினார். முஸ்லிம் சமூகமும் பல்வேறு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவதையும் விவரித்தார். ஒரு தீமை நடைபெறக்கண்டால் கரங்களால் தடுக்க வேண்டும் அல்லது மிக மிக குறைந்த பட்சம் மனதால் வெறுக்க வேண்டும் அவரே நம்பிக்கையில் குறைந்த தரத்தில் உள்ளவர் என்ற நபிமொழியை சுட்டிக்காட்டி இறைத்தூதர் அவர்கள் தீமையை தடுப்பதை இறைநம்பிக்கையோடு தொடர்பு படுத்தி சொன்னதை விளக்கினார். முஸ்லிம் சமூகத்தைப் போலவே பல்வேறு சமுதாயங்கள் பாதிப்புள்ளாக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் அந்நிய முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாட்டில் ஊழல் லஞ்சம் கொலை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பெருகியுள்ளது. இது போன்ற குற்றங்களை தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பதற்கான முழு பொறுப்பும் முஸ்லிம் சமுதாயமான நம்மிடத்தில்தான் உள்ளது. நீங்கள்தான் சிறந்த சமூகம் ஏனெனில் நீங்கள்தான் நன்மையை ஏவி தீமையை தடுக்கிறீர்கள் என்று குர்ஆனிலிருந்து வசனங்களை கோடிட்டு காட்டி பேசினார். எனவே சமூகத்தை புனரமைப்பது நமது கடமை என்று குறிப்பிட்டார்.

இறுதியாக சிறப்புப் பேருறையாற்றிய சோசியல் டெமாக்ரடிப் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் செய்யது இபுறாஹிம் அவர்கள் குடும்பத்தை புனரமைப்போம் என்ற தலைப்பில் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் அனைவருக்கும் எளிமையாக விளங்கும் வகையில் பேசினார்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் குடும்ப அமைப்புமுறை சீரழிந்து போய்விட்டது. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய சரிசெய்ய முடியாத பாதிப்பு இது என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். அமெரிக்க மக்கள் வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு முறை இல்லாத காரணத்தால் தறுதலையான அநாதையான குழந்தைகள் ஏராளமாக உருவாக்கப்பட்டு அவை மன உழைச்சலுக்குள்ளாகி பல துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று வருகிறது என்பதை பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிய முடிகிறது.

குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகமாக திகழவேண்டும். குடும்பம் என்பது ஒரு கல்விச்சாலையாக, கலாச்சார மையமாக, நிவாரண மையமாக, பாதுகாப்பு மையமாக, புத்துயிரூட்டும் மையமாக திகழவேண்டும் என்று குறிப்பிட்டார்.

குழந்தைகளிடம் இருக்கும் சில பிரச்சினைகள் பற்றி குழந்தை நல அல்லது மனோதத்துவ நிபுணரிடம் அலோசனை பெற நாம் சென்றால் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லும் ஆலோசனைகளில் ஒன்று குழந்தைகள் முன்னிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருபோதும் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்பது தான். கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வதால் அவை பிஞ்சு மனதில் நஞ்சாக பதிவாகிறது. நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை விட அவர்கள் நம்முடைய நடவடிக்கைகளை கவனித்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எனவே வீட்டின் சூழலை கல்வி கற்கும் கலாச்சாலையாக செம்மையானதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்..

கலாச்சாரத்திற்கு ஒரு உதாரணமாக உடைக்கலாச்சாரத்தை எடுத்துகொண்டு குழந்தைகளிடம் எவ்வாறு அது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினார். சிறு வயதில் சுமார் மூன்று வயது குழந்தைக்கு நவீன கலாச்சாரம் என்ற பெயரில் அரைகுறை ஆடையை அணிவிக்கிறோம். இது சிறு குழந்தை தானே அதில் எந்த தவறும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும் அந்த ஆடை அணிந்தபோது அனைவரின் பாராட்டையும் பெற்ற இக்குழந்தை வளர்ந்து விட்ட பிறகு கண்ணியமான ஆடை அணியும்போது பிற ஆண்களால் தான் கவரப்படவில்லை என்பதை உணரும்போது கவலையடைகிறாள். ஆழ்மனதில் பதிந்த பிறரை கவர்ந்து பாரட்டுப்பெற வேண்டும் என்ற உணர்வுதான் மிகைக்கும் இதனால் கண்ணியமான ஆடை, முடிவெடுக்கத்தெரியாத விடலைப்பருவத்தில் இவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது. எனவே சிறு குழந்தைப்பருவம் முதற்கொண்டு நமது குடும்பம் ஒரு கலாச்சார மையமாக திகழுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சியை புதிய தேசம் இணையதள பத்திரிக்கை ஆசிரியர் காதிர் அலி அவர்கள் தொகுத்து வளங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010